வியாழன், 16 செப்டம்பர், 2010

அம்மா பாட்டி வீடு - பகுதி 2

பாட்டி வீட்டின் தோட்டம் சற்று பெரியது. அதில் கருவேப்பிலை மரம், வேப்பம் மரம், மாமரம், நர்த்தம் மரம் என்று பல வித மரங்கள் உண்டு. மதிய நேரம் பாட்டியின் அறுசுவை உணவை உண்ட பின் வேப்பமர நிழலில் அமர்வது ஒரு தனி சுகம். பின்புற வேப்பமரம் சற்று பெரியது அதனால் நல்ல சுகமான காற்று வரும். சில நேரம் பின் தாவரத்தில் உறங்கியதும் உண்டு. பாட்டி தினமும் காலை வீட்டில் இருந்து கிணற்று அடி செல்லும் பாதையை மாட்டு சாணம் கரைத்து தெளிப்பார்கள் (இயற்கை கிருமி நாசினி :-)). காலை சாணம் தெளித்த தரை பார்பதற்கு இளம் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் மிகவும் அழகாக இருக்கும்.
கருவேப்பிலை மரம் ஏறுவது தான் எளிது, அது நல்ல வாட்டமாக ஏறுவதற்கு வளைந்து இருக்கும்.

நான் பாட்டி வீட்டில் இருக்கும் பொழுது காலை எழுவதற்கு மனமே இருக்காது. பாட்டியின் திட்டு, ராகம் மாதிரி இருக்கும் (பெண் பிள்ளை இவ்வளவு நேரம் தூங்ககூடாது, எப்போ காலை உணவு அருந்துவது, ......) வேறு வழி இல்லாமல் எழுந்து வரவேண்டும்.
மெதுவாக பின்கட்டை ரசித்து கொண்டே துணி துவைக்க பெரிய கருங்கல் ஒரு மேடையில் போட்டு இருக்கும் அதில் அமர்ந்து பின்புறம் உள்ள வயல், முள்வேலிக்கு அடுத்து இருக்கும் குயவர் வீடு, அங்கு அவர்கள் களிமண் பிசையும் விதம், சக்கரத்தை சுற்றி அழகாக பானை அல்லது சட்டி செய்வதை ரசித்து, மகிழுந்து பல் துலக்கி முடிவதற்குள் பாட்டி சுடுநீர் வைத்திருப்பார்கள்.
தாத்தா அதற்குள் குளித்து நீரில் நனைத்து பிழிந்த துணியை இடுப்பில் கட்டி கொண்டு செம்பரதம் செடியில் இருந்து சிவப்பு செம்பரதம் பறித்து கொண்டு இருப்பார்கள் (என்றாவது நான் அதிகாலை எழுந்து நீராடி இருந்தால் நானும் தாத்தாவுடன் பூ பறிப்பது உண்டு). நான் மிக விரைவாக நீராடி முடித்து பூஜை முடிப்பதற்குள் சென்று அமர்ந்து விடுவது என்னுடைய பழக்கம்.
பூஜை முடிந்த பின் பாட்டியின் சூடான பலகாரம் தயாராக இருக்கும். அது பெரும்பாலும் பஞ்சு போல் இருக்கும் இட்லி, தேங்காய் சட்னி அல்லது சாம்பார், அன்று காலை தயிரில் கடைந்த வெண்ணை, கட்டி தயிர்.
காலை உணவு முடிந்த பின் பாட்டி ஏதேனும் எனக்கு வேலை தருவார்கள்.
இன்னும் பயணம் செய்வோம் மகிழ்ச்சியுடன் .......

திங்கள், 19 ஜூலை, 2010

நண்பனின் கவிதை - 2

உனக்காக கவிதை கேட்டேன் தோழி
வானம் மழை தந்தது
மண் வாசம் தந்தது
இந்த நேசம் உன் நட்பு தந்தது
இன்னும் நீ வளர என்றும் வாழ்த்தும் நண்பன்

நண்பனின் கவிதை - 1

நான் மரணகளுக்கு கவிதை வசிப்பதில்லை
உன் கல்லறைக்கு
என் கவிதைகளை சுமந்துவராது என் தாள்கள்
வாசிக்க நீயில்லாத போது வரிகளுக்கு அங்கு என்ன வேலை
மறக்க வேண்டிய நினைவுகளும்
மறக்க முடியாத நினைவுகளும்
மறக்க கூடாத நினைவுகளுமாய்
சுவாசிக்க உன் நினைவுகளை எடுத்துக்கொண்டு
மௌனங்களை மொழியாக்கிவிட்டு வந்துவிடுவேன் தோழி.

வெள்ளி, 9 ஜூலை, 2010

அம்மா பாட்டி வீடு - பகுதி 1

காட்டுமன்னார் கோவில் என்னும் ஊரில் இருந்து சில மைல் தொலைவில் உள்ளது அம்மாவின் பிறந்த ஊர். ஊருக்கு செல்லும் வழி மிகவும் அழகாக இருக்கும். சாலையின் ஒரு புறம் வடவாறு மறுபுறம் தென்னம் தோப்பு, வயல்வெளி, ஊரின் அம்மன் கோவில் நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் .

ஊரின் பேருந்து நிறுத்தம் ஒரு பெரிய புளிய மரம். பாட்டி வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு அழகிய பெரிய செந்தாமரை குளம், நீரோடை, தென்னம் தோப்பு, பிள்ளையார் கோவில் உள்ளது.

வருடம் முழுதும் படித்து களைத்து செல்லும் ஒரு அழகிய இடம். இப்பொழுது இருக்கும் சிறுவர்கள் இழக்கும் ஒன்று.



பாட்டி வீடு பெரியதாக இருக்கும் (எனக்கு) . முன்பக்கம் அழகிய சிமெண்ட் வளைவுடன் கூடிய நடைபாதை அதன் இருபுறமும் மணல் பரப்பு ஒருபுறம் மாடு தண்ணீர் குடிக்கும் சிமெண்ட் தொட்டி. வீட்டிற்கு ஒருபுறம் பெரிய வேப்பமரம் மறுபுறம் மஞ்சள் சரகொன்றை மரம் . இரவில் அந்த வேப்பமர காற்றின் மணம் மற்றும் சுகம் தனி கயிற்று  கட்டிலில் படுத்து கொண்டு பலநாட்கள் அதை நாங்கள் அனுபவித்து உள்ளோம் ( டவுனில் தாத்தா வாங்கிவரும் சூடான பலகரதுடன்).


நடைபாதையில் இருந்து இரண்டு படி ஏறினால் நீண்ட சிமெண்ட் திண்ணை (மர தூண்களுடன்) அதில் அமர்ந்து அம்மா,தாத்தா, பாட்டி நீண்ட நேரம் பேசுவார்கள் . திண்ணையின் முன்பு தாவாரம் , அதின் ஒரு புறத்தில் சிறிய வளைவுடன் கூடிய சந்திற்குசெல்லும் வாயில் மற்றும் மிகப்பெரிய வேலைப்பாடு கொண்ட நுழைவாயில்.



உள்ளே சென்றால் ஒரு அறையில் நெல்லை வைக்கும் தொம்பை மற்றும் இடதுபுறம் பெட்ரூம். பெரிய வரவேற்பறையின் ஒருபக்கம் மாடிக்கு செல்லும் படிக்கட்டு, பெரிய மரஊஞ்சல் ஆடுவதற்கு வசதியாக இருக்கும் (இப்பொழுது நான் இருக்கும் என் இனிய இல்லத்தின் வரவேற்பு, சாப்பாட்டு மற்றும் சமையல் இடம் சேர்த்தல் இந்த இடம் :-) ). சித்தியின் திருமண வரவேற்பு இந்த வரவேற்பு அறையில் தான் நடந்தது என்பார்கள்.



வரவேற்பறை முடிந்தவுடன் ஒரு சிறிய தாவாரம். அதன் இடதுபுறம் பாத்திரம் மற்றும் சாமி இருக்கும் இடம். உள்ளே சென்றால் வாசலுடன் கூடிய அடுப்பறை. ஒருபக்கம் விறகு அடுப்பு, மற்றும் ஒரு பக்கம் தயிர் கடையும் பானை. வாசலின் (தொட்டி போன்ற அமைப்பு ) விளிம்பில் ஒரு மேடை, மறுபக்கம் மாவு அரைக்கும் கல், மற்றும் ஒரு புறம் அம்மி



வாசலின் வழி இயற்கையான சூரிய வெளிச்சம் உள்ளே வரும். இதை கடந்தால் ஒரு சிறிய தாவாரம் அதில் சுவர் ஓரம் இரண்டு மண் அடுப்பு (இதில் தான் பாட்டி இடியப்பம் மாவு, வடகம் செய்ய கூழ் தயார் செய்வார்கள்).

இன்னும் காண்போம்.......