வியாழன், 13 பிப்ரவரி, 2014

அம்மா பாட்டி வீடு - பகுதி 3


பாட்டி வீட்டின் தோட்டம் சற்று பெரியது. அதில் கருவேப்பிலை மரம், வேப்பம் மரம், மாமரம், நர்த்தம் மரம் என்று பல வித மரங்கள் உண்டு. மதிய நேரம் பாட்டியின் அறுசுவை உணவை உண்ட பின் வேப்பமர நிழலில் அமர்வது ஒரு தனி சுகம். பக்கத்தில் பானை செய்யும் குயவர்கள் வீடு அதனால் எப்பொழுதும் ஏதாவது வேலை  செய்து கொண்டே இருப்பார்கள். அந்த ஓசையும் குளுமையான
காற்றும் நம்மை தாலாட்டி தூங்க வைத்துவிடும்.
என் நாண்பன் ஒரு வலைத்தளத்தில் குறிப்பிட்டது போல் எங்கள் தலைமுறை தான் மிகவும் உலக வாழ்வை ரசித்து , அனுபவித்து , சுவைத்து ,மகிழ்ந்த, உணர்வு பூர்வமாக கற்றுக்கொண்ட  தலைமுறை.


அந்த ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து அம்மா என்று பசு மற்றும் எருதின் குரல் உங்களை எழுப்பும், இல்லை என்றால்  தாத்தா பால் கரக்க செல்லும் ஒலி கட்டாயம் எழுப்பிவிடும் . தாத்தா பால் கறக்கும் அழகை ரசிக்க தோன்றும் . முதலில் பசுவிற்கு குடிபதற்கு கழனி தண்ணி வைத்து விட்டு கன்றினை பால் குடிகவிடுவார்கள் அது குடித்த பின் மாட்டின் பால் சுரக்கும் காம்பினை நன்றாக கழுவி, விளக்கெண்ணை காம்பில் தடவி, பின் வீரல்களால் நீவி பாலை பால் படியில் கறப்பார்கள். ஒருமுறை நானும் முயன்றேன் ஆனால் முடியவில்லை . என்னது அம்மா, பாட்டி , சித்தி , தாத்தா அழகாக பால் கறக்கும் பொழுது  எனக்கு கோவமாக வரும்.
அந்த பாலை அப்படியே குடித்தாலும் சுவையாக இருக்கும் (நான் அதை சுவைத்து இருக்கேன் ). பாட்டி பாலினை பித்தளை சட்டியில் ஊற்றி விறகு அடுப்பில் நல்ல தீயில் தண்ணீர் விடாமல் காய்ச்சி குடிபதற்கு தருவார்கள் அவ்வளவு சுவை இன்னும் அந்த சுவை நீனைவிலும், நாக்கிலும் இனிக்கின்றது . விடுமுறை முடிந்து வந்தால் நம்மை ஆவின் பால் வரவேற்கும் :-)
மாலை தேநீர் நீரம் முடிந்ததும் பாட்டி  எதாவது வேலை தருவார்கள் . ஆடுக்கல்லில் கட்டாயம் இட்லி மாவு அரைக்கும் பணி இருக்கும் . நான் குழவியை சுற்றினால் பாட்டி மாவினை தள்ளி விடுவார்கள் . சிறிது நேரம் உதவிவிட்டு பாட்டியிடம் ரொம்ப கைவலிக்குது பாட்டி என்றும் அழுது எழுந்து சென்றுவிடுவேன் . என் பாட்டி ஆயிற்றே என்னை பற்றிய தெரியாது அடுத்த வேலை கொடுப்பார்கள் . சின்ன குட்டி (பாட்டி, தாத்தா செல்லமாக வேலை  வாங்கும் அழகில் இதுவும் ஒன்று ) தண்ணி எடுத்துகிட்டு போய் வாசல் தெளித்து அழகாய் கோலம் போடுவியாம் என்பார்கள் அவர்களிடம் என்ன சண்டையா போட தோன்றும் ! சரி பாட்டி என்று உற்சாகமாக செல்வேன்.
நான் வீடுமுறைக்கு சென்றால் தாத்தா பொட்டலம் வாங்கிவர டவுனுக்கு கட்டாயம் செல்வார்கள் . பாட்டி இருட்டும் வேளை வந்ததும் சுவாமிக்கு வீளக்கு ஏற்றிவிட்டு என்னிடம் பிள்ளையார் கோவிலுக்கு எண்ணெய் கொடுத்து அனுப்புவார்கள் , ஓடி சென்று பிள்ளையார் கோவிலில் விளக்கு ஏற்றியவுடன் பாட்டி வீட்டு வாயிலில் நின்று பிள்ளையாரை கும்பிடுவார்கள் . நான் வீளக்கு போட்டு விட்டு ஐய்யர்  வீட்டு பாட்டியுடன் சிறிது பேசிவிட்டு வீட்டுக்கு வருவேன் .
பாட்டி திண்ணையில் அமர்ந்து இருப்பார்கள். யாராவது உறவினர்கள் வந்தால் திண்ணை நீரினது இருக்கும். நான் தாத்தாவின் பொட்டலத்திற்காக காத்திருப்பேன் . தாத்தாவின் டிவிஎஸ் 50 சத்தம் கேட்டவுடன்  வாசலுக்கு வரவேற்க சென்று விடுவேன் . நான் மட்டும் வீட்டில் இருந்தால் கவலை இல்லை எல்லாம் எனக்கு மட்டும் . என்னுடன் எப்பொழுதும் சண்டை போடும் என் மாமா பயன் இருந்தால் யுத்தம் நடக்கும்(அவற்றை பின்னால் பகிர்வேன் ).
வாங்கி வந்த திண்பண்டங்கள் முடிந்தபின் திண்ணையின் முன் இருக்கும் மணல் பரப்பில் இருக்கும்  தாத்தாவின் கட்டிலில் படுத்துக்கொண்டு வானத்தை பார்த்துகொண்டு வேம்பின் காற்றில் படுத்துக்கொண்டு தாத்தா பாட்டியின் உரையாடலை ரசித்தபடி இருப்பேன்.
இன்றைய பொழுதுபோல் நாளை கட்டாயம் இருக்காது.


கருத்துகள் இல்லை: